இஸ்ரேலியப் படையினரின் தாக்குதலில் காயமடைந்து உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கின்போது இஸ்ரேல் படையினர் -பாலஸ்தீன மக்களிடையே ஜெருசலேத்தில் நேற்று மோதல் வெடித்தது.
இஸ்ரேல் படைகள் மீது கற்கள் உள்ளிட்டவற்றை வீசி பாலஸ்தீன தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இஸ்ரேலிய படைகள் கூட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசியதுடன், சரமாரித் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 71-பேர் காயமடைந்தனர்.
இஸ்ரேலியப் படையினருடன் ஏப்ரல் 22 அன்று ஜெருசலேமின் மிக முக்கியமான அல் அக்ஸா மசூதியில் இடம்பெற்ற மோதலின்போது இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலில் காயமடைந்த வலீத் ஷரீப்பின் என்ற இளைஞன் சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு நேற்று இடம்பெற்றது. இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் உடல் அல் அக்ஸா மசூதியில் நேற்று வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் இடம்பெற்றது. இறுதி ஊர்வலத்தின்போது பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேல் படைகள் மீது கற்கள் உள்ளிட்டவற்றை கொண்டு தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதால் இரு தரப்புக்கும் இடையே பெரும் வன்முறை வெடித்தது.
இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் 71 பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாக பாலஸ்தீனர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கண்ணில் காயமடைந்த இருவர் உட்பட பதின்மூன்று பேர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தரப்பில் ஆறு படை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய 20 பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இதேவேளை, கடந்த புதன்கிழமை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் இஸ்ரேலிய படையினரால் அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் ஷெரீன் அபு அல்லெஹா கொல்லப்பட்டார்.
செய்தியாளர் ஷெரீன் அபு அல்லெஹா இறுதிச் சடங்கின் போதும் இஸ்ரேலிய படைகள் - பாலஸ்தீனர்களிடையே பெரும் மோதல் இடம்பெற்றது. இதன்போது பாலஸ்தீனர்கள் பலர் கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.